முகப்பு
உலகம்

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார். 

Updated On : 21 அக்டோபர் 2022, 2:36 pm IST
பகிர்:

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 88. 

இலங்கையின் மூத்த இலக்கியப் படைப்பாளியும் தமிழ் இலக்கிய ஆய்வாளருமான சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934 பிப்ரவரி 16ல் பிறந்தார். 

கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்த இவர், பின்னர் இலங்கை திரும்பி பதுளை செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். 

Advertisement

Advertisement

தெளிவத்தை என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தனது பெயருடன் 'தெளிவத்தை' என்பதையும் இணைத்துக்கொண்டார். 

'காலங்கள் சாவதில்லை' என்ற நாவலும் 'நாமிருக்கும் நாடே' என்ற சிறுகதைத் தொகுப்பும் இவரது முக்கியப் படைப்புகளாகும். இலங்கை மலையகம் குறித்து 'மலையக சிறுகதை வரலாறு' என்ற நூலை எழுதியுள்ளார். 

‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கை சாகித்ய விருதைப் பெற்றுள்ளார்.  இவரது ‘குடைநிழல்’ புதினம் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது. மேலும், 2013- க்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக தெளிவத்தை ஜோசப் கொழும்பு வத்தளை இல்லத்தில் இன்று(அக்.21, வெள்ளிக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.