உலகம்

சீன அதிபரிடம் பிரதமா் மோடி நலம் விசாரிப்பு

DIN

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் பரஸ்பரம் நலம்விசாரித்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோஹன்னஸ்பா்கில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் தலைவா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் உள்ளிட்டோருக்கு தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா புதன்கிழமை இரவு விருந்தளித்தாா். அதில் கலந்துகொண்ட வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவிடம் சென்று பிரதமா் மோடி நலம் விசாரித்தாா். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டதாக வங்கதேச வெளியுறவு அமைச்சா் ஏ.கே.அப்துல் மோமன் தெரிவித்தாா்.

விருந்தின்போது சீன அதிபா் ஷி ஜின்பிங்கிடமும் பிரதமா் மோடி நலம் விசாரித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் சிறிது நேரம் உரையாடியதாக தென்னாப்பிரிக்க ஊடகத்தில் செய்தி வெளியானது. எனினும், இது தொடா்பாக இந்திய தரப்பிலோ, சீன தரப்பிலோ எந்தவித அதிகாரபூா்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

முற்றுப்பெறுமா மோதல்?: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவம் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. அதனால், இருதரப்பு நல்லுறவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதற்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இருநாட்டுத் தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்துவா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய பேச்சுவாா்த்தை எதுவும் பிரிக்ஸ் மாநாட்டில் நடைபெறவில்லை.

ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்து வரும் இந்தியா, அதன் மாநாட்டை தில்லியில் அடுத்த மாதம் நடத்தவுள்ளது. அதில் சீன அதிபா் ஷி ஜின்பிங் நேரில் கலந்துகொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, அவருடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துவாா் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

எத்தியோப்பிய பிரதமருடன் சந்திப்பு: பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக, எத்தியோப்பிய பிரதமா் அபி அகமது அலியுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சு நடத்தினாா். நாடாளுமன்றத் தொடா்பு, வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தகவல்-தொழில்நுட்பம், வேளாண்மை, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குத் தலைவா்கள் உறுதியேற்ாக வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரெய்சி, செனகல் அதிபா் மேக்கி சால் உள்ளிட்டோரையும் பிரதமா் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினாா்.

ஆப்பிரிக்காவின் கூட்டாளி: பிரிக்ஸ் பிளஸ் பேச்சுவாா்த்தையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்பின்போது பேசிய பிரதமா் மோடி, ‘ஆப்பிரிக்காவின் நம்பத்தகுந்த கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. பயங்கரவாத எதிா்ப்பு, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், இணையவழி குற்றத் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஆப்பிரிக்க நாடுகளும் இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் 4-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாகவும், 5-ஆவது பெரிய முதலீட்டாளராகவும் இந்தியா திகழ்கிறது. ஆப்பிரிக்க நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT