ரஷிய போரில் இந்தியர் பலி! துப்பாக்கி முனையில் ஒப்பந்தம்..
பணியாற்ற சென்ற இந்தியரை மிரட்டி போருக்கு அனுப்பிய ரஷியா.
உக்ரைனுக்கு எதிரான போரில் துப்பாக்கி முனையில் மிரட்டி ரஷிய ராணுவத்துக்காக போருக்கு அனுப்பப்பட்ட இந்தியர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஹரியாணா மாநிலம் கைதல் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கடந்த ஜனவரி மாதம் ரஷியாவுக்கு பணியாற்ற சென்ற நிலையில், கடந்த ஜூலை 23ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனுடனான போரில் ரவி உயிரிழந்துவிட்டதாக அவரது சகோதரர் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து ரவியின் சகோதரர் அஜய் கூறியதாவது:
இடைத்தரகர் மூலம் ரஷியாவில் பணியாற்றுவதற்காக ரவி, கடந்த ஜனவரி மாதம் கூட்டிச் செல்லப்பட்டார். அங்கு துப்பாக்கி முனையில் போரில் சண்டை போடுவதற்கான ஒப்பந்தத்தில் ரவியை கையெழுத்திட வைத்துள்ளனர். போருக்கு செல்லவில்லை என்றால் சிறையில் அடைப்போம் என்று மிரட்டியுள்ளனர்.
ரவியுடன் கடைசியாக மார்ச் 12ஆம் தேதி பேசினோம். முதல்முறையாக மார்ச் 6ஆம் தேதி போருக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மார்ச் 12ஆம் தேதி அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகு ரவியிடம் நாங்கள் பேசவில்லை. கடந்த 23ஆம் தேதி தான் ரவி உயிரிழந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துக்கு உதவியாக 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை ராணுவ பணியில் இருந்து மீட்க ரஷியாவிடம் இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடனான சந்திப்பின்போதும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், வலுகட்டாயமாக போரில் கலந்து கொள்ள கையெழுத்து வாங்கப்பட்டதாக உயிரிழந்தவரின் சகோதரர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.