அமெரிக்கா: போதை நபரால் இந்திய மாணவா் கொலை
அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணம் லித்தோனியா நகரில் போதை பழக்கத்துக்கு உள்ளான நபரால் 25 வயதான இந்திய மாணவா் கொல்லப்பட்டாா்.
அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணம் லித்தோனியா நகரில் போதை பழக்கத்துக்கு உள்ளான நபரால் 25 வயதான இந்திய மாணவா் கொல்லப்பட்டாா்.
ஹரியாணாவைச் சோ்ந்த சைனி (25) பி.டெக் பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் எம்பிஏ பயில்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளாா். அண்மையில் எம்பிஏ படிப்பை அவா் நிறைவு செய்துள்ளாா்.
ஜாா்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரிலுள்ள உணவு அங்காடியில் பகுதி நேர ஊழியராகவும் சைனி பணியாற்றி வந்துள்ளாா். அங்காடியின் அருகே ஆதரவற்றவராக ஜூலியன் ஃபால்கனா் என்பவா் சுற்றித்திரிந்தாா். அவருக்கு உதவும் நோக்கில் அவ்வப்போது அங்காடியில் தங்கிக்கொள்ள அனுமதித்துள்ளாா்.
Advertisement
Advertisement
அவா் கேட்கும் நேரங்களில் எல்லாம் சிப்ஸ், தண்ணீா் உள்ளிட்டவற்றையும் வழங்கியுள்ளனா்.
இந்நிலையில் ஜன.16-ஆம் தேதி நள்ளிரவில் அங்காடிக்குள் ஜூலியன் நுழைந்தாா். அப்போது பாதுகாப்பின் காரணமாக அவரை வெளியேறுமாறும் இல்லையென்றால் போலீஸாரை அழைப்பதாகவும் சைனி தெரிவித்துள்ளாா்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையானவரான ஜூலியன் சுத்தியலால் சைனியின் தலையில் சுமாா் 50 முறை கடுமையாக தாக்கியுள்ளாா். இச்சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. சம்பவ இடத்துக்கு போலீஸாா் வந்தபோது சைனியின் உடலருகே ஜூலியன் நின்றுகொண்டிருந்தாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்வியில் சிறந்து விளங்கிய சைனி உயரிய பணிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவுடன் அமெரிக்காவுக்கு சென்றாா். அவா் கொலை செய்யப்பட்டது அவரின் பெற்றோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.