கம்போடியா - தாய்லாந்து மோதலில் பிரம்மாண்ட விஷ்ணு சிலை தகர்ப்பு! வலுக்கும் கண்டனம்!
கம்போடிய எல்லையில் விஷ்ணு சிலை தகர்ப்பு! தாய்லாந்து ராணுவம் அத்துமீறல்?
கம்போடிய எல்லையில் விஷ்ணு சிலை தகர்க்கப்பட்டதற்கு கண்டனம் வலுக்கிறது. இந்தச் செயலுக்கு தாய்லாந்து ராணுவமே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடான தாய்லாந்துக்கும் இடையே கடும் மோதல் நீடிக்கிறது. தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்னை இருந்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டது.
இரு நாடுகளும் எல்லைப்புற நிலத்தில் உள்ள சில இடங்களுக்கு பரஸ்பரம் உரிமை கோரி வருகின்றன. அந்த இடங்களில் நூற்றாண்டு பழைமையான கோயில்களின் இடிபாடுகள் உள்ளன. இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் குடிகொண்டிருக்கும் நிலையில், கம்போடியாவின் எல்லையில் நிறுவப்பட்டிருந்த உயரமான ஹிந்துக் கடவுளின் சிலை, தாய்லாந்து ராணுவத்தால் தகர்க்கப்பட்டிருப்பதாக கம்போடிய அரசு பரபரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
Advertisement
இது தொடர்பான விடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரு நாட்டு எல்லைக்கோட்டிலிருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில், கம்போடியாவுக்குள்பட்ட ஆன் சேஸ் பகுதியில் நிறுவப்பட்டிருந்த விஷ்ணு சிலை தகர்க்கப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.