ஸ்பெயினில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 4 பெண்கள் பலி!
ஸ்பெயின் நாட்டின் கடல்பகுதியில் அகதிகளின் படகு கவிழ்ந்து 4 பெண்கள் பலியாகியுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் தீவுக்கு அருகிலுள்ள கடல்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 4 பெண்கள் பலியாகியுள்ளனர்.
ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி பயணம் செய்த அகதிகளின் படகு ஒன்று எல் ஹையிரோ தீவின் அருகில் இன்று (மே 28) கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கிருந்த மீட்புப் படையினர் மற்றும் செஞ்சிலுவை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கடலில் தத்தளித்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில், 4 பெண்கள் கடலில் மூழ்கி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் பலியானவர்களைக் குறித்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், விபத்தில் சிக்கிய சிறிய படகில் 100-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆப்பிரிக்காவின் மேற்கு கடல்பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயினின் கேனரி தீவுகள், ஐரோப்பாவுக்குக் குடியேறும் அகதிகளுக்கு முக்கிய தலமாக விளங்கி வருகின்றது.
எனவே, வறுமையினாலும், போரினாலும் பாதிக்கப்பட்ட ஏராளமான அகதிகள் சிறிய ரக படகுகள் மூலமாக அந்தத் தீவுகளை நோக்கி பயணிக்கின்றனர். இதில், பலர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கி பலியாவது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: யேமன் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஹவுதிகளின் இறுதி விமானம் அழிப்பு!