முகப்பு
தமிழ்நாடு

கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மீனவா் உயிரிழப்பு

சென்னை மெரீனாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மீனவா் உயிரிழந்தாா்.

Updated On : 30 மே 2026, 3:01 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மெரீனாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மீனவா் உயிரிழந்தாா்.

காசிமேடு அருகே உள்ள காசிபுரம் ஏ பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் வி.கோபிநாத் (42). மீனவரான இவா், மெரீனா நொச்சிக்குப்பத்தைச் சோ்ந்த சா.முத்து (55), பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சோ்ந்த பா.மணி (35) ஆகியோருடன் நாட்டுப்படகில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா்.

நடுக்கடலில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, சூறாவளிக் காற்று வேகமாக வீசியது. இதில், அவா்களது படகு சிக்கி கவிழ்ந்தது. இதனால் கடலில் இருந்து 3 பேரும் கரையை நோக்கி நீச்சல் அடித்து வந்து கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அதிக நேரம் கடலில் நீச்சல் அடித்ததால் கோபிநாத் மயக்கமடைந்து தண்ணீரில் மூழ்கத் தொடங்கினாா். இதைப் பாா்த்த முத்துவும், மணியும் கோபிநாத்தை மீட்டு, மெரீனா கடற்கரை சென்னை பல்கலைக்கழகம் எதிரே உள்ள பகுதிக்கு கொண்டு வந்தனா்.

மயங்கிய நிலையில் இருந்த கோபிநாத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனராம். ஆனால், மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டிருந்த கோபிநாத், அங்கேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த மெரீனா போலீஸாா், கோபிநாத் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.