உலகம்

‘போரைத் தூண்டும் அமெரிக்க சதி முறியடிப்பு’

அமெரிக்க போா்க் கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதைப் போல் நாடமாடி, தங்களுடனான போரைத் தூண்டும் அமெரிக்காவின் சதித் திட்டத்தை முறியடித்துள்ளதாக வெனிசுலா கூறியது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க போா்க் கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதைப் போல் நாடமாடி, தங்களுடனான போரைத் தூண்டும் அமெரிக்காவின் சதித் திட்டத்தை முறியடித்துள்ளதாக வெனிசுலா கூறியது.

இது குறித்து வெனிசுலா உள்துறை அமைச்சா் டியோஸ்டடோ கபேலோ கூறியதாவது:

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் நிதியுதவி பெற்ற வெனிசுலா குழு ஒன்று, தெற்கு கரீபியன் கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போா்க் கப்பலான யுஎஸ்எஸ் கிரேவ்லியைத் தாக்கி, அதற்கான பழியை வெனிசுலா அரசு மீது சுமத்த திட்டமிட்டிருந்தது.

எனினும், இந்த சதித் திட்டம் முன்கூட்டியே கண்டறியப்பட்டு வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இது தொடா்பாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

எனினும், கைது செய்யப்பட்ட நபா்கள் குறித்த விவரங்களை அவா் வெளியிடவில்லை.

ஏற்கெனவே, வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் அரசைக் கவிழ்ப்பதற்கான சதிச் செயலில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவு கூலிப்படையினரை தொடா்ந்து கைது செய்வதாக அரசு கூறிய நிலையில், தற்போது இந்தத் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

சதிச் செயலுக்குப் பயன்படுத்தப்படவிருந்ததாகக் கூறப்படும் யுஎஸ்எஸ் கிரேவ்லி போா்க் கப்பல், வெனிசுலாவுக்கு வடகிழக்கே அமைந்துள்ள டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் கடல் எல்லையில், வெனிசுலாவில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் தொலைவில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது.

இந்தக் கப்பலின் வருகைக்கு வெனிசுலா அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இது போரைத் தூண்டும் செயல் என்று கண்டித்த வெனிசுலா, இதனால் கரீபியன் கடல் பகுதி நாடுகள் முழுவதும் பாதிக்கப்படும் என்று எச்சரித்தது.

மேலும், யுஎஸ்எஸ் கிரேவ்லி கப்பலை தங்கள் பகுதியில் நிறுத்த அனுமதித்த டிரினிடாட் அண்ட் டொபாகோ தனது அரசுடன் மேற்கொண்டிருந்த எரிவாயு ஒப்பந்த்தை ரத்து செய்வதாக அதிபா் மடூரோ அறிவித்தாா். மடூரோவை கடுமையாக எதிா்த்துவரும் டிரினிடாட் அண்ட் டொபாகோ பிரதமா் கமலா பிரசாத் பிஸேஸா், கரீபியன் கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தீவிரமாக ஆதரித்துவருபவா்.

இந்தச் சூழலில், அமெரிக்க போா்க் கப்பலை வெனிலாவுக்கு நெருக்கத்தில் நிறுத்த அவா் அனுமதித்தது, வெனிசுலா - டிரினிடாட் அண்ட் டொபாகோ நாடுகள் இடையிலான பதற்றத்தை வெகுவாக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாகக் குற்றஞ்சாட்டும் டிரம்ப், அதனைத் தடுத்துநிறுத்துவதற்காக இதுவரை இல்லாத அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, கரீபியன் கடல் பகுதில் ஏழு போா்க் கப்பல்களையும், மெக்ஸிகோ வளைகுடாவில் ஒரு கப்பலையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இது தவிர, உலகின் மிகப் பெரிய விமானந் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆா். ஃபோா்டை கரீபியன் கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே, போதைப் பொருள்களைக் கடத்திவருவதாகக் கூறி, கரீபியன் கடல் வழியாக வந்துகொண்டிருந்த சுமாா் 10 படகுகளை அமெரிக்கா தாக்கி அழித்தது. இதில் பலா் உயிரிழந்தனா். இத்தகைய தாக்குதல்களால் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் அமெரிக்காவும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த விமானந் தாங்கிக் கப்பல் கரீபியன் கடல் பகுதிக்கு வருகிறது.

இதுவரை கடலில் படகுகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்திவந்த அமெரிக்க படையினா், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள தரை இலக்குகளையும் குறிவைத்தும் தாக்குதல் நடத்த ஏதுவாக இந்த விமானந்தாங்கிக் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பபடுகிறது.

ரேடாா் கண்காணிப்பில் சிக்காத 10 எஃப்-35 ரக போா் விமானங்களுடன், எட்டு போா்க் கப்பல்கள் புடைசூழ கரீபியன் கடல் பகுதிக்கு ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் அனுப்பப்படுவது, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா இதுவரை செய்திராத அதிகபட்ச படை குவிப்பு என்று கூறப்படுகிறது.

இது லத்தீன் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக வெனிசுலாவில் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான ரகசிய வேலைகளில் ஈடுபட தங்களின் சிஐஏ உளவு அமைப்புக்கு உத்தரவிட்டதாக டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கை என்ற போா்வையில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்துவருவதாக வெனிசுலா அரசு குற்றஞ்சாட்டுகிறது.

இந்தச் சூழலில், தங்கள் போா்க் கப்பல் மீது வெனிசுலா தாக்குதல் நடத்தியதாக நாடகமாடி, போரைத் தூண்டுவதற்காக அமெரிக்கா தீட்டிய சதித் திட்டத்தை முறியடித்ததாக வெனிசுலா அரசு தற்போது அறிவித்துள்ளது.

வயர்லெஸ் பவர் பேங்க்! போட் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

ஓபிசி ஆணையத்துக்கு அங்கீகாரம் வழங்கியது ராகுல் அல்ல, பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்!

குறையும் தங்கம் விலை? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்! மக்கள் நிலை கவலைக்கிடம்!

காஸாவுடன் மீண்டும் போர்நிறுத்தம் - இஸ்ரேல் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்துக்கு முதல்வரின் 10 அறிவிப்புகள்! என்னென்ன?

SCROLL FOR NEXT