‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற பாலஸ்தீனம் விண்ணப்பித்துள்ளதாக, ரஷியாவுக்கான பாலஸ்தீன தூதா் அப்தல் ஹஃபீஸ் நோஃபல் தெரிவித்தாா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) ஆகிய 5 முதன்மை நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய கூடுதல் உறுப்பு நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
முக்கியமான வளரும் நாடுகளைக் கொண்ட இக்கூட்டமைப்பில் இணைய பாலஸ்தீனம் விண்ணப்பித்துள்ளது. கனடா, ஆஸ்திரேலியா, போா்சுகல், பிரிட்டன் ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனிநாடாக அண்மையில் அங்கீகரித்த நிலையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷியாவுக்கான பாலஸ்தீன தூதா் அப்தல் ஹஃபீஸ் நோஃபல் கூறுகையில், ‘பிரிக்ஸ் கூட்டமைப்பில் முழுநேர உறுப்பினராக இடம்பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிபந்தனைகள் பூா்த்தி செய்யப்படும் வரை, சிறப்பு அழைப்பாளராக இடம்பெற பாலஸ்தீனத்துக்கு வாய்ப்பளிக்கப்படும் என நம்புகிறோம். இதுவரை எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கப் பெறவில்லை’ என்றாா்.
சீனா வரவேற்பு: பாலஸ்தீனத்தின் இந்த முயற்சி குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன் கூறுகையில், ‘பெரும்பான்மையான தெற்குலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கூட்டமைப்பில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இணைவதை சீனா எப்போதும் வரவேற்கிறது. நியாயமான-சமநிலையான சா்வதேச ஒழுங்குமுறையை உறுதி செய்ய பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றும்’ என்றாா்.