அணு ஆயுதக் கொள்கையில் விடாப்பிடியாக ஈரான்! - டிரம்ப் குற்றச்சாட்டு
ஈரான் அணு ஆயுதக் கொள்கையில் விடாப்பிடியாக உள்ளது: டிரம்ப் குற்றச்சாட்டு
ஈரான் அணு ஆயுதக் கொள்கையில் விடாப்பிடியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான சண்டைக்குத் தீர்வு எட்டப்பட, பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் இடையே சனிக்கிழமை (ஏப். 11) சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் சென்றிருந்த அமெரிக்க குழுவுக்கு தலைமை தாங்கிய ஜே. டி. வான்ஸ், போரை நிறுத்தும் நோக்கத்தில் அமெரிக்க விதித்த நிபந்தனைகளை ஈரான் தரப்பு ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, இது தொடர்பாக, டொனால்ட் டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) தெரிவித்திருப்பதாவது :
Advertisement
“ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஈரான் உறுதியளித்தது. ஆனால், தெரிந்தே அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர். இது, ஆத்திரத்தையும் வலியையும் உலகெங்கிலும் பல மக்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்படுத்தியது.
அவர்கள் நீருக்குள் கண்ணிவெடி வைப்பதாகவும் தெரிவித்தனர். அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, இந்தச் சர்வதேச நீர் வழித்தடத்தை திறக்க விரைந்து நடவடிக்கையைத் தொடங்கியிருக்கலாம். ஒவ்வொரு சட்டத்தையும் அவர்கள் மீறிச் செயல்பட்டிருக்கின்றனர்.
ஈரானுடனான ஆலோசனை காலையில் ஆரம்பமாகி இரவு முழுவதும் சுமார் 20 மணி நேரம் வரை நீடித்தது. அதில், ஒரேயொரு விஷயம் மட்டுமே முக்கியம் - ‘ஈரான் தமது அணு சக்தி திட்டங்களை கைவிடுவதை விரும்பவில்லை!’ என்பது தெளிவாகிறது.
இத்தகைய கடினமான, எப்போது என்ன செய்வார்களோ என்று கணிக்க முடியாத மக்களின் கைகளில் அணு சக்தி அனுமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. ஈரானால் ஒருபோதும் ஒரு அணு ஆயுதத்தைக் கொண்டிருக்க முடியாது!” என்று பொருள்படக் குறிப்பிட்டுள்ளார்.