ஈரான் வளைகுடாப் பகுதியில் 'அணு ஆயுதப் போட்டியை' தூண்டக்கூடும்: ஜே. டி. வேன்ஸ் எச்சரிக்கை
ஈரான் வளைகுடாப் பகுதியில் 'அணு ஆயுதப் போட்டியை' தூண்டக்கூடும் என அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வேன்ஸ் எச்சரிக்கை குறித்து...
வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது உலகளவில் ஒரு "அணு ஆயுதப் போட்டியை"த் தூண்டும் என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கூறியுள்ளார். மேலும், தெஹ்ரான் உடன்பாடு எட்டப்படாவிட்டால், கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அமெரிக்கா "தயார் நிலையில்" உள்ளது என்றார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரான் "நியாயமாக" நடந்துகொள்வதாகக் கூறிய கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய வளைகுடா நாடுகளின் தலைவா்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஈரான் மீது செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த ராணுவ தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்ட ஒரு நாள் கழித்து, செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேன்ஸ் கருத்துகள் வெளியாகின.
ஈரானுடன் தீவிர பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் ஒரு உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
"ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிபர் டிரம்ப் எங்களிடம் கேட்டுக்கொண்டார். நாங்கள் அதைத்தான் செய்துள்ளோம்," என்று துணை அதிபர் கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் போரைத் தொடங்கின. பின்னா், கடந்த ஏப். 8 முதல் இருதரப்பும் தற்காலிக போா்நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
நீடித்த அமைதிக்காக பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் பேச்சுவாா்த்தை நடந்து வரும் நிலையில், இரு தரப்பும் தொடா்ந்து தங்கள் கோரிக்கைகளை மாற்றிக்கொண்டே இருப்பதால், ஒப்பந்தம் எட்டப்படுவதில் சுணக்கம் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், ஈரானின் வங்கிப் பரிவா்த்தனைகளைக் கையாளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.