சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் கருத்து...
அமெரிக்கா தனது சர்வாதிகாரப் போக்கை கைவிட்டால் மட்டுமே உடன்பாட்டுக்கான வழி கண்டறியப்படும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சனிக்கிழமை 21 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா சாா்பில் அந்நாட்டின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், அதிபா் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், மத்திய கிழக்கு ஆசிய அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோரும், ஈரான் சாா்பில் அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா் முகமது பகோ் கலிபாஃப், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
Advertisement
ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது, ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. அதில், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
அமைதிப் பேச்சு தோல்வி அடைந்ததற்கு, அணுஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட மறுப்பதும் ஒரு காரணம் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தாா்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
”அமெரிக்க அரசாங்கம் தனது சர்வாதிகாரப் போக்கை கைவிட்டு, ஈரான் நாட்டின் உரிமைகளை மதிக்கும் என்றால், ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான வழிகள் நிச்சயமாகக் கண்டறியப்படும்.
பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர்களையும், குறிப்பாக, எனது அன்புச் சகோதரர் டாக்டர் காலிபாஃப் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.