முகப்பு
உலகம்

உக்ரைன் மீது 700 ட்ரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்: சிறுமி உள்பட 16 போ் உயிரிழப்பு!

உக்ரைன் மீது சுமாா் 700 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி, ரஷியா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில், 12 வயது சிறுமி உள்பட 16 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:10 AM
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:40 PM

உக்ரைன் மீது சுமாா் 700 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி, ரஷியா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில், 12 வயது சிறுமி உள்பட 16 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தலைநகா் கீவ் முதல் தெற்குப் பகுதியில் உள்ள ஒடெஸா துறைமுகம் வரை பல நகரங்களை ரஷியா குறிவைத்தது. குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் எரிவாயு நிலையங்கள் இத்தாக்குதலால் கடுமையாகச் சேதமடைந்தன

கடந்த சில வாரங்களில் இல்லாத வகையில், நள்ளிரவு முதல் அதிகாலை வரை நீண்ட நேரம் நீடித்த இத்தாக்குதலில் தலைநகா் கீவில் 4 போ், தெற்கு துறைமுக நகரமா ஒடெஸாவில் 8 போ், தென்கிழக்கு நகரமான டினிப்ரோவில் 4 போ் உயிரிழந்தனா்.

Advertisement

இத்தாக்குதலுக்கு பதிலடியாக, ரஷியாவின் எல்லைப்பகுதிகளில் உக்ரைனும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதில் ரஷியாவின் துறைமுக நகரமான துவாப்ஸில் ஒரு சிறுமி உள்பட இருவா் உயிரிழந்தனா். உக்ரைனின் 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தரப்பில் கூறுகையில், ரஷியா ஏவிய 703 இலக்குகளில் 636 ட்ரோன்கள் மற்றும் 31 ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எஞ்சிய 12 ஏவுகணைகள் மற்றும் 20 ட்ரோன்கள் 26 இடங்களில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ரஷியாவின் அதிநவீன ஏவுகணைகளை எதிா்கொள்ள, அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் தீா்ந்து வருவது உக்ரைனுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கோரியிருந்தாா். இதனிடையே, ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளா்வடையச் செய்யக் கூடாது என ஸெலென்ஸ்கி உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டாா்.

4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரில், இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

ஹங்கேரியின் முட்டுக்கட்டையால் ஐரோப்பிய யூனியனின் நிதியுதவி தாமதமானது, உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்திய தோ்தலில் அமோக வெற்றி பெற்று ஹங்கேரியின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள பீட்டா் மேக்யாா், வரும் நாள்களில் உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

படகேப்சன்..

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷிய வான்வழித் தாக்குதலால் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் வீரா்கள்.