அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு மீண்டும் ஈரான் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து...
அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பகல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்ல கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று ஈரான் அரசு அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் இந்த நடவடிக்கையை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெறும் என சனிக்கிழமை காலை அறிவித்தார்.
Advertisement
இந்த நிலையில், அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடரும் வரையில் ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்லும் வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து முடக்கப்படும் என ஈரானிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி, ஈரான் ராணுவத்தின் கூட்டுத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“ஈரானிய ராணுவப் படையின் நிர்வாகம் மற்றும் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் ஹோர்முஸ் நீரிணை அதன் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் முடக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், ஈரானிய துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்களை அமெரிக்க கடற்படையினர் முற்றுகையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.