அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற விரும்புவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தகவல்
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற விரும்புவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் வேலை தேடியோ குடியுரிமை பெற வேண்டும் என்றெல்லாம் போராடிய காலங்கள் உண்டு. ஆனால், தற்போது அமெரிக்காவிலிருந்து வெளியேறவே பலரும் முயல்வதாகவும் விரும்புவதாகவும் கார்னகி என்டோவ்மென்ட் என்ற சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் 54 லட்சம் இந்தியர்கள் (அமெரிக்காவின் மக்கள்தொகையில் 1.6 சதவிகிதம்) வசித்து வரும்நிலையில், அவர்களில் 40 சதவிகிதத்தினர் அமெரிக்காவைவிட்டு வெளியேற விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
Advertisement
அவர்களிலும் 14 சதவிகிதத்தினர் அமெரிக்காவைவிட்டு உடனடியாக வெளியேற விரும்புவதாகவும், 26 சதவிகிதத்தினருக்கு அமெரிக்காவைவிட்டு வெளியேறும் எண்ணம் அவ்வப்போது வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்களாக, அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழல், டிரம்ப்பின் இரண்டாது பதவிக்காலத்தில் அவரின் சரியில்லாத செயல்பாடுகள்தான் காரணம் என 71 சதவிகிதத்தினர் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, விலை உயர்வு, வீட்டு வாடகை, குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களை மேற்கோள் காட்டி நிதி நெருக்கடி ஏற்படுவதாக 54 சதவிகிதத்தினரும், பாதுகாப்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக 41 சதவிகிதத்தினரும் கூறுகின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவில் இந்தியர்கள் குடியேறுவதை டிரம்ப் விரும்பாத நிலையில், இந்தியர்களும் சீனர்களும் நரகத்தின் குழிகள் என்று சமீபத்தில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தியர்கள், அமெரிக்காவில் குழந்தையைப் பெற்றெடுத்து, பிறப்புரிமைக் குடியுரிமை பெற்று விடுவதாகவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதாகவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.