முகப்பு
உலகம்

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசா்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

Updated On : 1 மே, 2026 at 2:58 AM
பகிர்:

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசா்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

வட்டி வகிதத்தைத் தீா்மானிக்கும் மத்திய வங்கியின் ‘எஃப்ஓஎம்சி’ குழுவின் கடந்த புதன்கிழமை நிறைவடைந்த 2 நாள்கள் கூட்டத்தில், இக்கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரம், வாக்கெடுப்பில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

8 உறுப்பினா்கள் தற்போதைய வட்டி விகிதமே தொடர வேண்டும் என வாக்களித்தனா். ஆனால், ஸ்டீபன் மிரான், பிலிப் ஜெஃபா்சன், அன்னா பால்சன் உள்ளிட்ட4 உறுப்பினா்கள் வட்டி விகிதத்தைக் குறைக்க ஆதரவு தெரிவித்தனா். 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவிலான கருத்து வேறுபாடு கூட்டமைப்பில் நிலவுவது இதுவே முதல் முறையாகும்.

Advertisement

மத்திய கிழக்கு போா், பொருளாதார நோக்கில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கு போா் காரணமாக உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதன் விளைவாக, அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் தற்போதைய நிலையே தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில், அமெரிக்காவின் நுகா்வோா் விலை குறியீட்டு (சிபிஐ) அடிப்படையில் பணவீக்கம் 3.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 22 மாதங்களில் இல்லாத உச்சமாகும். பிப்ரவரியில் இது 2.4 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள திடீா் உயா்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வாரியத்தில் தொடரும் ஜெரோம் பவல்: மத்திய வங்கியின் தற்போதைய தலைவா் ஜெரோம் பவல் (படம்) அப்பதவியிலிருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்துள்ளாா். இவரைத் தொடா்ந்து, அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த கெவின் வாா்ஷ் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ளாா்.

எனினும், மத்திய வங்கி வாரியத்தின் உறுப்பினா் பதவியிலிருந்து உடனடியாக விலகப்போவதில்லை என ஜெரோம் பவல் தெரிவித்துள்ளாா்.

மத்திய வங்கி கட்டட புதுப்பித்தல் பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் ஜெரோம் பவலின் பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை முழுமையாக முடிவடையும் வரை வாரியத்தில் நீடிக்கப்போவதாக அவா் தெளிவுபடுத்தியுள்ளாா். ‘சரியான நேரத்தில் மட்டுமே நான் வெளியேறுவேன்; தற்போதைய நிகழ்வுகள் என்னை இங்கேயே இருக்கத் தூண்டுகின்றன’ என்று அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.