எபோலா வந்தால் முற்றிலும் அழிந்துவிடுவோம்: அச்சத்தில் ஆப்ரிக்க மக்கள்!
ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பால் முற்றிலுமாக அழிய வாய்ப்பிருப்பதாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பால் முற்றிலுமாக அழிய வாய்ப்பிருப்பதாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அச்சத்த்ல் உள்ளனர்.
ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக லாட்சக்கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் எபோலா பாதிப்பு காரணமாக அதிகளவில் உயிரிழப்புகளைச் சந்திக்கக்கூடும் என மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
கிங்கோன்ஸ் பகுதியில் 25,000 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள டோர்கஸ் மாபென்ஸி என்கிற பெண் பேசியது உலகம் முழுவதும் ஒருவித அச்ச உணர்வையும், எபோலா பாதிப்பின் அவலத்தையும் வெளிக்காட்டியுள்ளது.
Advertisement
Advertisement
அவர் பேசுகையில், “நாங்கள் மீன்கள் கூட்டத்தைப் போன்று அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், எபோலா பாதிப்பு அதிகரித்தால் நாங்கள் முற்றிலுமாக அழிந்துவிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கோவின் கிழக்குப் பகுதியில் எபோலா மிக வேகமாகப் பரவி வருகிறது. தொற்றும் வகையிலான வைரஸான இது, அங்கு பல உயிர்களை பலியாக்கி வருகின்றது. பல ஆண்டுகளாக அந்நாட்டில் நீடித்து வரும் ஆயுத மோதல்கள் காரணமாக மக்கள் பலரும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் எபோலா தொற்று ஏற்பட்டால் அனைவரும் கொத்துக் கொத்தாக மடியும் நிலை வருமென்று கூறப்படுகிறது.
இடம்பெயர்ந்த மக்களில் 10 லட்சம் பேர் இட்டூரிபகுதியில் உள்ளனர். இந்த மாகாணம் காங்கோவின் கடும் வறுமையான பகுதியாகும்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுபற்றி பேசுகையில், ”காங்கோவின் கிழக்குப் பகுதி, நோய் மற்றும் உள்நாட்டு மோதல் என பேரழிவை எதிர்கொள்கிறது. அங்கு ஏற்படும் மோதல்கள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதைத் தடுக்கின்றன” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், “எபோலா பரவலை எதிர்த்துப் போராட மேலும் சர்வதேச அளவில் உதவியும் நிதியும் தேவை. அதிகாரிகள் மீது அவநம்பிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களிடையே இருக்கும் அச்சத்தைத் தணித்து, வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் பரவுவதைத் தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியமான ஒன்று” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எபோலா வைரஸ் தொற்று பரவல், காங்கோ மற்றும் உகாண்டாவில் மே 15 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை, 61 பேர் எபோலாவால் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 240 பேரின் இறப்பு சந்தேகத்திற்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 359 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.