ஈரான் புதிய தலைவருக்கு கோமா? தகவலுக்கு 10 மில்லியன் டாலர்! அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 மில்லியன் டாலர் சன்மானம் என அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் தலைமை மதகுருவான மோஜ்தபா கமேனி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 மில்லியன் டாலர் சன்மானம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான மோஜ்தபா கமேனி உள்பட 10 பேர் குறித்த தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர் சன்மானம் அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, வழிநடத்தி மற்றும் திட்டமிடுவதாகக் கூறி, ஈரானின் முக்கிய 10 பிரமுகர்களின் பெயர்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இவர்கள்தான் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை வழிநடத்துவதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
Advertisement
Advertisement
அவர்களில் முதலாவதாக - ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி, இரண்டாவதாக கமேனி அலுவலகத்தில் பணிபுரியும் மற்றும் படையின் துணைத் தலைமை ஊழியரான அலி அஸ்கர் ஹெஜாசி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர், கமேனியின் ஆலோசகர், ராணுவ ஆலோசகரான மேஜர் ஜெனரல் யாஹ்யா ரஹீம் சஃபாவி, ராணுவ அலுவலகத் தலைவர், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் ஆலோசகருமான அலி லாரிஜானி, உள்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் எஸ்கந்தர் மோமெனி, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எஸ்மாயில் கதீப் மற்றும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி உள்ளிட்ட 10 பேர் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 92.54 கோடி ரூபாய்) சன்மானத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதனிடையே, ஈரானின் முன்னாள் தலைமை மதகுருவான அயதுல்லா கமேனி மீதான தாக்குதலின்போதே, அவரது மகனும் தற்போதைய தலைமை மதகுருவான மோஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், தற்போது கோமாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாகவும் சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
மேலும், ஈரானின் தாக்குதல் தொடரும் என்று மோஜ்தபா கமேனியின் அறிக்கையையும் அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் செய்தியாளர்தான் வாசித்தார். தலைமை மதகுருவாக மோஜ்தபா அறிவிக்கப்பட்டதிலிருந்து பொதுவெளியில் அவர் தோன்றாமல் இருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
US puts $10M bounty on Mojtaba Khamenei
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.