முகப்பு
உலகம்

இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்!

ஒரே நாளில் 9 நாடுகளை ஈரான் தாக்கியது பற்றி...

Updated On : 19 மார்ச் 2026, 9:27 am IST
இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதல் - AP
பகிர்:

இஸ்ரேல், கத்தார், செளதி அரேபியா உள்பட 9 நாடுகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் புதன்கிழமை நடத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கிய 19 நாள்களில் மிகப் பெரிய தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.

ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப்பெரிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அங்கிருந்த ராணுவ நிலைகளை முற்றிலுமாக அழித்தது.

Advertisement

Advertisement

இதனிடையே, கடந்த 2 நாள்களில் ஈரானின் முக்கிய தலைவர்களான தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லார்ஜானி உள்பட மூவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில், உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி மையமான ராஸ் லஃபான் எரிசக்தி மையத்தின் மீது 14 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ஈரான் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மத்திய இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 21 ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இவை அனைத்தையும் இடைமறித்ததாக அந்நாட்டு அரசு அறிவித்தாலும், எரிசக்தி ஆலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அச்சுறுத்தல் நிலவுவதால் பணிகளை நிறுத்தியுள்ளனர்.

இதேபோல், செளதி அரேபியாவில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோலிய ரசாயன ஆலைகளில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், பஹ்ரைன், ஜோர்டான், குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது.

ஓமனின் தொழிற்சாலை மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஈரானின் தெற்கு பார்ஸின் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 19 நாள்களில் 500-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2,000 ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

தற்போது உலகின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே போரின் காரணமாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 109 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஈரான் தாக்குதலால் சர்வதேச எரிபொருள் விநியோக சங்கிலி முற்றிலும் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.

summary

From Israel to Qatar...! Iran attacks 9 countries!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments