அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு!
அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இலங்கை அதிபர் தெரிவித்தார்.
இலங்கையில் அமெரிக்க போர் விமானங்களை நிறுத்த அனுமதி மறுத்ததாக இலங்கை அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், கடந்த மார்ச் 4 அன்று இந்தியாவில் பயிற்சி முடித்து கிளம்பிய ஐரிஸ் டெனா என்கிற ஈரானின் போர்க் கப்பலை இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் எல்லைக்கு அப்பால் அமெரிக்கா தாக்கியதால் ஈரான் மாலுமிகள் 84 பேர் பலியாகினர். இலங்கை கடற்படையினரின் உதவியால் 32 பேர் மீட்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மறுநாளே ஈரானின் ஐரிஸ் புஷேர் எனப்படும் மற்றொரு கப்பல் 225 பணியாளர்களின் பாதுகாப்பு காரணமாக இலங்கை எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் தற்போது வரை கொழும்புவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்கா தனது போர் விமானங்களை நிறுத்த அனுமதி கோரிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக, “அமெரிக்கா கப்பல்களைத் தாக்கும் 8 ஏவுகணைகள் கொண்ட இரு போர் விமானங்களை மட்டாலா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மார்ச் 4 முதல் 8 வரை நிறுத்த அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு நாம் மறுப்பு தெரிவித்தோம்.
அதே சமயத்தில் ஈரானும் மார்ச் 9 முதல் 13 வரை தங்களது 3 போர்க் கப்பல்களை நிறுத்த அனுமதி கேட்டனர். அவர்களின் கோரிக்கை தற்போது வரை ஏற்கப்படவில்லை.
நாம் ஈரானுக்கு ‘ஆம்’ என்று சொன்னால், அமெரிக்காவுக்கும் ‘ஆம்’ என்று சொல்ல வேண்டியதாக இருந்திருக்கும்.
ஆனால், நாம் மறுத்துவிட்டோம். நமது நடுநிலையான நிலைப்பாட்டை நாம் உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இலங்கை தனது மொத்த ஏற்றுமதிச் சந்தையின் பிரதானமான அமெரிக்கா மற்றும் தேயிலை ஏற்றுமதி விற்பனையில் அதிகளவு பங்கு கொண்டுள்ள ஈரானுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது.