அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்: போப் லியோ வரவேற்பு
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு போப் 14-ஆம் லியோ வரவேற்பு
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை வரவேற்பதாக போப் 14-ஆம் லியோ கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 ஆம் தேதியில் நடைபெறவுள்ள அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு வரவேற்பு தெரிவித்து போப் 14-ஆம் லியோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வெள்ளிக்கிழமையில் (ஜூன் 19) கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. இந்த ஒப்பந்தம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஊக்கமளிக்கிறது.
இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பையும், ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்தவும் பணியாற்றிய நாடுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
மத்திய கிழக்கில் பரஸ்பர நம்பிக்கை, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், மக்களிடையே பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப். 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தின. இதனையடுத்து, ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து, இரு தரப்பிலும் போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வந்தன. இருப்பினும், இரு நாடுகளுக்கிடையேயும் போர் நிறுத்தப்படுவதாய் இல்லை.
போரை நிறுத்த அமெரிக்காவின் முன்மொழிந்த ஒப்பந்தம் ஏற்கத்தக்கதாய் இல்லை என ஈரான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில், இறுதியாக ஈரானும் அமெரிக்காவும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூன் 12 ஆம் தேதியில் அறிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 ஆம் தேதியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.