ஜெருசலேம் மீது தொடர் தாக்குதல்களை நடத்தும் ஈரான்!
ஜெருசலேமில் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தவிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேல் நிலப்பரப்பை நோக்கி ஈரான் ஏவுகணைகளை செலுத்தியதாக இஸ்ரேல் ராணுவம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.
முதல் எச்சரிக்கைக்குப் பிறகு எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என அவசர மருத்துவ உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவப் படைகள் விரைவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று (மார்ச் 21) ஜெருசலேமில் உள்ள புகழ்பெற்ற மசூதியான அல் - அக்ஸா மசூதி அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் வான்வழியில் மறிக்கப்பட்ட போதும் ஏவுகணையின் பாகங்கள் மசூதிக்கு மிக அருகே விழுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி சமூக வலைதளங்களில் காணொளிகளைப் பகிர்ந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் துறை, “ஈரானின் ஏவுகணை தாக்குதலின் விளைவுகள் இவை. ஜெருசலேமின் மசூதிக்கு அருகே ஈரானின் ஏவுகணை பாகங்கள் விழுந்துள்ளன. மீண்டும் ஒரு முறை பொதுமக்கள் வாழும் பகுதிகள், புனித தலங்களின் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் நாட்டை அழிக்கும் நோக்கத்தில் நேர்மையற்ற முறையில் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது” என குற்றம்சாட்டும் வகையில் பதிவிட்டனர்.
ஜெருசலேம் மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள இரு நகரங்கள் மீது நேற்று ( மார்ச் 21) ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலில் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களில் 175 பேருக்கு சிகிச்சை அளித்ததாகவும் ஒரு குழந்தை உள்பட 10 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொரோகா மருத்துவ மையம் தெரிவித்தது.
டிமோனா மற்றும் அராத் நகரங்களில் பல குடியிருப்புகள் சேதமடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
ஈரானின் நதான்ஸ் அனுசக்தி மையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதிலடியாக இஸ்ரேலின் டிமோனா நகரில் உள்ள அனுசக்தி மையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வான்வழித் தாக்குதல்களை மறித்து தாக்கும் ஏவுகணைகளைத் தாண்டி எவ்வாறு இத்தகையத் தாக்குதல்கள் நடைபெற்றது என விசாரணை நடத்திவருவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.