இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!
இஸ்ரேல் - ஈரான் நாடுகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே தற்காலிகமாக போர்நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்டு 2 மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்புப் படை முயன்றபோதும் மத்திய இஸ்ரேல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மத்திய மற்றும் மேற்கு ஈரானில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று அதிகாலை தொடங்கியது. ஏப்ரல் 8 முதல் தற்காலிக போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து ஈரான் நடத்திய மிகப்பெரிய தாக்குதலைத் தொடர்ந்து பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
Advertisement
Advertisement
ஈரான் போர் தொடங்கி இன்றுடன் 100 நாள்கள் நிறைவடைகிறது. பிப். 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற மூத்த தலைவர்களைக் கொன்றதைத் தொடர்ந்து இந்தப் போர் தொடங்கியது. கடுமையான மோதல்களை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஏப். 8 முதல் போர்நிறுத்தம் செய்யப்பட்ட போதிலும் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் ஈரானின் கெடுபிடிகள் மற்றும் லெபனானின் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருடன் இஸ்ரேலின் மோதல் காரணமாக இந்தப் போரில் நிரந்தர முடிவை எட்டுவது சவாலாக உள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் தனது அணுசக்தி கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ள மறுப்பதாலும், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருவதாலும் போர் மீண்டும் வெடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றது.
ஈரானில் தொடர்ந்து இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வருவதால் தனது வான்வழியை மூடுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த ஏமனில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதனால், மேற்காசிய பகுதி முழுவதும் மீண்டும் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.