அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்க இஸ்ரேல் ஒப்பந்தம்!
அமெரிக்காவிடமிருந்து இரு போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவிடமிருந்து இரு போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து புதிய போர் விமானங்களை வாங்க இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இஸ்ரேலின் வான்வழிப் பாதுகாப்பு சார்ந்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் விதமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
”இஸ்ரேல் இராணுவத்திற்கு ஒரு நீடித்த தரமான பாதுகாப்பு வழங்குவதற்காக எஃப்-35 மற்றும் எஃப்-15ஐஏ ரக விமானங்களைக் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் எந்த சூழலிலும் செயல்படுவதற்குத் தேவையான கருவிகள் மற்றும் வலிமையைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் மேலும் கூறினார்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கூட்டுத் தயாரிப்புத் திட்டமான எஃப்-35 ரக போர் விமானம், உலகின் மிகவும் தரம் வாய்ந்த இராணுவ விமானங்களில் ஒன்றாகும். இஸ்ரேல் ஏற்கனவே இந்த ரக விமானங்கள் பலவற்றை வைத்துள்ளது.
இஸ்ரேலின் விமானப்படை காஸா போரில் ஒரு முக்கியப் பங்காற்றியது. சமீபகால போர் வரலாற்றில் மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக அது இருந்தது.
ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்களை இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்கி அழித்தன. ஆனால், அதிக மக்கள் அடர்த்தி கொண்ட அப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவையும் தாக்கி அழிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் ஈரானுக்கு எதிராக இரண்டு போர்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. அதில், ஈரானின் மிக உள்ளார்ந்த பகுதிகளிலும் இஸ்ரேலின் ஏவுகணைகள் தீவிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இஸ்ரேல் சமீபத்தில் தனது 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறை செலவினங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கியுள்ளது.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போரைத் தொடங்கியது. அப்போது முதல், தனது இராணுவச் செலவினங்களை தொடர்ந்து இஸ்ரேல் அதிகரித்து வருகின்றது.