இந்திய ராணுவ தலைமைத் தளபதியின் பேச்சுக்கு பாகிஸ்தான் விமர்சனம்!
இந்திய ராணுவ தலைமைத் தளபதியின் பேச்சை பாகிஸ்தான் ராணுவம் விமர்சித்தது குறித்து...
இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதியின் பேச்சை பாகிஸ்தான் ராணுவம் விமர்சித்துள்ளது.
தில்லியில் சனிக்கிழமை (மே 16) நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், ‘ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மீண்டும் சூழல் உருவானால், இந்திய ராணுவம் எப்படி எதிா்கொள்ளும்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், ’இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டினால், புவியில் ஓர் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது’ என்று எச்சரித்தார்.
Advertisement
இதை விமர்சித்த பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்ததாவது:
“இறையாண்மை கொண்ட அண்டை நாட்டை, அதன் புவியியல் எல்லைகளிலிருந்து முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்று அச்சுறுத்துவது, வியூக சமிக்ஞையோ அல்லது அச்சுறுத்தும் செயலோ அல்ல; அது அறிவாற்றல் திறன்களற்ற நிலையைக் குறிக்கிறது.
பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதனுடன் அமைதியாக இணைந்து வாழ இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானைக் குறிவைக்கும் எந்தவொரு முயற்சியும், இந்தியாவிற்கு உத்தி ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஏற்புடையதல்ல. அப்படி நிகழ்ந்தால் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
தெற்காசியாவை மற்றொரு நெருக்கடி அல்லது போரை நோக்கித் தள்ள முயற்சிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், அதன் விளைவுகள் அந்த நாட்டுக்கு மட்டுமல்லாமல் அதனைத் தாண்டியும் பேரழிவை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தது.