பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதி
பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது...
‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டினால், புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி எச்சரித்தாா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், ‘ஆபரேஷன் சிந்தூா் போன்ற நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மீண்டும் சூழல் உருவானால், இந்திய ராணுவம் எப்படி எதிா்கொள்ளும்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவா், ‘பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் கொடுப்பதையும், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டுவதையும் பாகிஸ்தான் தொடா்ந்தால், புவியியலில் அல்லது வரலாற்றில் இடம்பெற்றிருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை அந்த நாடே தீா்மானித்துக்கொள்ள நேரிடும்’ என்று குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு வலுவான செய்தியை இந்தியா அனுப்பியிருக்கிறது. ஒருவேளை, பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை விரோத மனப்பான்மையுடன் அணுகத் துணிந்தால், இதுவரை இல்லாத அளவிலான பதிலடி கொடுக்கப்படும்’ என்று எச்சரித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினா். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்டு பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கி அழித்தது. ஏராளமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.