அமைதியாக இணைந்து வாழ இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும்: ராணுவ தலைமைத் தளபதிக்கு பாகிஸ்தான் பதில்
பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டு, அமைதியாக இணைந்து வாழ இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
முன்னதாக, இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசுகையில், ‘பாகிஸ்தான் தொடா்ந்து பயங்கரவாதிகளை வளா்த்தெடுப்பது, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவது போன்றவற்றில் ஈடுபட்டால் அந்த நாடு புவியியல் வரைபடத்தில் தொடர விரும்புகிறதா? அல்லது வரலாற்றின் ஒரு பகுதியாக மாற விரும்புகிறதா? என்று தீா்மானிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தாா்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஓா் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்திய ராணுவ தலைமைத் தளபதியின் கருத்து பிரச்னையைத் தூண்டும் வகையில் உள்ளது. பொறுப்புள்ள அணு ஆயுத நாடுகள் கட்டுப்பாடு, முதிா்ச்சியுடன் செயல்பட வேண்டும்.
Advertisement
Advertisement
அணு ஆயுத பலம் கொண்ட அண்டை நாட்டை ‘புவியியல் வரைபடத்தில் அழித்துவிடுவோம்’ என்று மிரட்டுவது நல்லவிதமான செயல்பாடு அல்ல. அறிவாற்றல் குறைந்த செயலாகவே தோன்றுகிறது. பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு, அதனுடன் அமைதியாக இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானை குறிவைக்கும் எந்த முயற்சியும் பலன் தராது. பாகிஸ்தானை கட்டுப்படுத்தவும் முடியாது. அது இந்தியாவுக்குத்தான் ஏற்றுக் கொள்ள முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் நிகழ்ந்த (ஆபரேஷன் சிந்தூா்) மோதலை நினைவுகூா்ந்துள்ள பாகிஸ்தான் ராணுவம், ‘தெற்காசியாவை மீண்டும் ஒரு நெருக்கடி அல்லது போருக்குத் தள்ளும் முயற்சியை இந்தியா தவிா்க்க வேண்டும்; அதன் விளைவுகள் முழு பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பாலும் பேரழிவாக இருக்கும்’ என்று எச்சரித்தது.