நான் வெளிநாட்டு உளவாளி அல்ல: மோடியிடம் கேள்வி எழுப்பிய நார்வே பெண் நிருபர் பதில்!
நார்வேயில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் நிருபருக்கு எதிராகக் குவியும் பதிவுகள் குறித்து...
நார்வேயில் பெண் நிருபர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்காமல் சென்ற சம்பவம் உலக அரங்கில் விவாதத்திற்குள்ளான நிலையில், அப்பெண் நிருபர் குறித்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அவை அனைத்திற்கும் சேர்த்து பதில் அளித்த நார்வே பெண் நிருபர் ஹெல்லே லிங், தான் வெளிநாட்டு உளவாளி எல்ல என்றும், பத்திரிகையாளர் எனவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நெதர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் தனது பயணத்தை முடித்துவிட்டு நார்வேக்கு சென்றார்.
Advertisement
Advertisement
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் உடன் பிரதமர் மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நார்வே பெண் நிருபர் ஹெல்லே லிங் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்காமல் புறக்கணித்துவிட்டுச் சென்றார்.
இது தொடர்பான விடியோவை ஹெல்லே லிங் பகிர்ந்துள்ளார். அதில், “உலகின் சுதந்திரமான பத்திரிகைத்துறையிடம் இருந்து சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்துவிட்டுச் செல்லலாமே?..” என்று கேட்கிறார். ஆனால், பிரதமர் மோடி பதிலளிக்காமல் அங்கிருந்து செல்வது போன்ற காட்சிகள் அந்த விடியோவில் பதிவாகியுள்ளன.
இந்த விடியோ உலக அளவில் பலரால் பகிரப்பட்ட நிலையில், கருத்து சுதந்திரம் மிக்க நாட்டின் தலைவர் நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டதாக பலர் பிரதமரை விமர்சித்து வருகின்றனர்.
இதேபோன்று, பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் நிருபர் உலகின் வலுவான சக்தி சீனா, எனக் குறிப்பிட்டு பெய்ஜிங்கிற்கு ஆதரவாகவும் ஸி ஜின்பிங்கை புகழ்ந்து கட்டுரைகளை எழுதியுள்ளதாகவும், இதனால் இவர் சீன கைகூலி என விமர்சித்து வருகின்றனர்.
மேலும், சிலர் இப்பெண் நிருபர் ஏலியன் என்றும், வெளிநாட்டு உளவாளி எனவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு எக்ஸ் தளப் பக்கத்தில் பதில் அளித்துள்ள நிருபர் ஹெல்லே லிங், ''இதை நான் எழுத வேண்டியிருக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை; ஆனால், எந்தவொரு அயல்நாட்டு அரசாங்கத்தாலும் அனுப்பப்பட்ட, எவ்வகையான அயல்நாட்டு உளவாளியும் அல்ல நான். எனது பணி இதழியலில்தான் '’எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பி அதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்ற விடியோவை எக்ஸ் தளப் பக்கத்தில் ஹெல்லே லிங் பகிர்ந்த நிலையில், அதனைக் குறிப்பிட்டு மாலை நடைபெறும் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விருப்பப்படும் கேள்விகளைக் கேட்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.