மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்!
பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட நார்வே பத்திரிகையாளர் முகநூல், இன்ஸ்டா பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட நார்வே பத்திரிகையாளர் ஹெல்லேவின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் இடையே கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினர்.
அப்போது, நார்வேயின் ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் என்ற பெண் செய்தியாளர், பிரதமர் மோடியை நோக்கி ‘மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்தியாவை ஏன் நம்ப வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
செய்தியாளர்கள் சந்திப்பில் எந்தக் கேள்விக்கும் தலைவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேள்வியை எதிர்கொள்ளாமல் இருநாட்டு தலைவர்களும் வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா பின்தங்கியுள்ளதாக ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதப்பொருளானது.
இந்த நிலையில், ஹெல்லே லிங்கின் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவம் மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இதுதொடர்பாக ஹெல்லே லிங் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பத்திரிகை சுதந்திரத்திற்காகக் கொடுக்கப்படும் ஒரு சிறிய விலைதான். ஆனால், நான் இதற்கு முன் இப்படி ஒரு அனுபவத்தை பெற்றதில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், ஹெல்லே லிங்கிற்கு குறிப்பிடத்தக்க அளவில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் கொடுத்திருக்கிறது. கடந்த திங்கள்கிழமைக்கு முன் 800-க்கும் குறைவாக இருந்த அவரது எக்ஸ் பின்தொடர்வோர் எண்ணிக்கை கடந்த இரண்டு நாள்களிலேயே 45,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.