நார்வேயில் பெண் நிருபர் எழுப்பிய கேள்வி! பதிலளிக்காமல் சென்ற பிரதமர் மோடி!
நார்வேயில் பெண் நிருபர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்காமல் சென்ற சம்பவம் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
நார்வேயில் பெண் நிருபர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்காமல் சென்ற சம்பவம் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நெதர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு நார்வேக்கு சென்றுள்ளார்.
சமீபத்தில், ஐரோப்பிய தடையற்ற வர்த்த கூட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் முதல்முறையாக நார்வேவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
வெளியேறிய பிரதமர் மோடி: பிரதமரின் பயணத்தைத் தொடர்ந்து, ஓஸ்லோவில் நார்வே பிரதமர் ஜோனாஸ் - பிரதமர் மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், பிரதமர் மோடியிடம் நார்வேயைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் என்பவர், கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் பிரதமர் மோடி அங்கிருந்து உடனடியாக வெளியேறிய சம்பவம் உலகளவில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
இதுதொடர்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில், ஹெல்லே லிங் விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில், பத்திரிகையாளர் ஹெல்லே லிங், “உலகின் சுதந்திரமான பத்திரிகைத்துறையிடம் இருந்து சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்துவிட்டுச் செல்லலாமே?..” என்று கேட்கிறார். ஆனால், பிரதமர் மோடி பதிலளிக்காமல் அங்கிருந்து செல்வது போன்ற காட்சிகள் அந்த விடியோவில் பதிவாகியுள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளிடம் வாக்குவாதம்: அதைத்தொடர்ந்து, அதே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நார்வே பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் பதிலளித்தனர்.
அப்போது இந்திய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய ஹெல்லே லிங், “நாங்கள் உங்களை ஏன் நம்ப வேண்டும்? உங்கள் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்துவீர்கள் என்று உங்களால் உறுதியாகக்கூற முடியுமா? இந்தியப் பத்திரிகைகளின் விமர்சன கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கத் தொடங்குவாரா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செயலர் சிபி ஜார்ஜ், “நாங்கள் சமத்துவத்தை நம்புகிறோம், நாங்கள் மனித உரிமை மீறல்களிலும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். யாருடைய உரிமைகள் மீறப்பட்டாலும், அவர்கள் நீதிமன்றத்தை நாட உரிமை உண்டு.
நாங்கள் ஒரு ஜனநாயக நாடாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கை கொண்டிருந்தாலும், பிரச்சினைகளில் ஆறில் ஒரு பங்கை கொண்டிருக்கவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் எங்களிடம் உள்ளது. நாட்டுப் பெண்களுக்குச் சம உரிமைகள் உள்ளன. தில்லியில் மட்டும் குறைந்தது 200 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. அவை ஆங்கிலம், இந்தி மற்றும் பல மொழிகளில் ஒளிபரப்பாகின்றன.
இந்தியாவின் மிகப்பரந்து விரிந்த நிலப்பரப்பைப் பற்றி மக்களுக்கு எந்தவொரு புரிதலும் இல்லை. ஏதோவொரு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளியிடும் ஒன்று அல்லது இரண்டு செய்திகளைப் படித்துவிட்டு, பிறகு வந்து கேள்விகள் கேட்கிறார்கள்” என்றார்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “உங்கள் கேள்வியை நாங்கள் கேட்டுக்கொண்டோம், அதற்குப் பதிலளிப்போம்” என்றார்.
அதற்கு அந்த நார்வே பத்திரிகையாளர், எனக்கு இதற்கு உடனடியாகப் பதில் வேண்டும் என்று கூறியதாலும், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹெல்லே லிங்கின் பதிவை மறுபதிவிட்டு பதிலளித்துள்ள நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம், “பிரதமரின் பயணம் தொடர்பாக, இந்திய தூதரகம் இன்று இரவு 9.30 மணிக்கு ராடிசன் ப்ளூபிளாசா ஓட்டலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. நீங்கள் தாராளமாக வருகை தந்து உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
ராகுல் கேள்வி: பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதிலளிக்காமல் சென்றது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஹெல்லே லிங்கின் பதிவை குறிப்பிட்டு, “மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், பயப்படுவதற்கும் ஒன்றுமில்லை. பிரதமர் மோடி சில கேள்விகளுக்காகப் பீதியடைந்து ஓடுவதை பார்க்கும்போது, இந்தியாவின் மதிப்புக்கு என்ன ஆவது?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
Who is Helle Lyng, the journalist who asked PM Modi, “Why don’t you take questions from the freest press in the world?”
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.