நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி!
ஸ்வீடனில் இருந்து நார்வே நாட்டுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி...
ஐரோப்பிய நாடுகளின் பயணத்தில், ஸ்வீடன் நாட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நார்வேக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று அரசு முறைப் பயணமாக நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றார். இருநாடுகளுக்கும் இடையே சுமார் 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, நெதர்லாந்தில் இருந்து பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 17) மாலை ஸ்வீடன் நாட்டுக்குச் சென்றார். ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான “ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிரான்ட் கிராஸ்” எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
இத்துடன், பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையேயான முக்கிய உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இருநாடுகள் இடையிலான வர்த்தகம் 7.75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை காலை நார்வே நாட்டுக்குப் புறப்பட்டுள்ளார். சுமார் 43 ஆண்டுகளில் முதல்முறையாக நார்வேக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இந்தியா - நார்வே மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில், நார்வே, டென்மார்க், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 நாள் நார்வே பயணத்தில் அந்நாட்டு மன்னர் ஐந்தாம் ஹாரால்டு மற்றும் ரானி சோஞ்சா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக, ஐரோப்பிய நாடுகள் உடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.