க்ளோரி (Glory)

இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். உழைப்புக்கும், நேர்மைக்கும்
க்ளோரி (Glory)
Published on
Updated on
3 min read

இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். உழைப்புக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எளிமையான மனிதர்கள். இரண்டாவதாக உள்ளவர்கள் இவர்களுடைய உழைப்பின் பலனால் சுகம் காணும் கூட்டத்தினர். வர்க்க பேதங்கள் எல்லா காலத்திலும், எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. ‘வேலை செய்பவருக்கு வேலையை மேலும் கொடுங்கள், சும்மாயிருப்பவனுக்கு சம்பளத்தை உயர்த்துங்கள்’ என்று. இது ஒரு நகைச்சுவை துணுக்காக இருந்தாலும் உண்மையில் நம்மைச் சுற்றி நடப்பவற்றை சற்று உற்று கவனித்தால் தெரியும். சத்தமில்லாமல் கடின வேலை செய்து கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் கஷ்டத்தில் உழன்று கொண்டிருப்பவர்களாகவே இருப்பார்கள். நாம் தினந்தோறும் நடந்து செல்லும் சாலைகளை போட்டவர்கள் எல்லாம் பட்டினியின்றி வாழ்ந்தார்களா என்பதை யோசித்திருக்கவே மாட்டோம். சாமானியர்களான நாம் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் தான் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எளிதில் கடந்து போய்விடுவோம். ஆனால் அரசாங்கம் என்பது என்ன? அரசாங்கத்தை யார் தேர்ந்தெடுக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி வாக்களித்து நாம் தானே கட்சிகளைத் தேர்ந்தெடுத்து பதவிகளில் அமர வைக்கிறோம். பொறுப்பற்று ஒரு செயலை நாம் செய்தால் அதனால் பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயம் தான்.

க்ளோரி என்ற பல்கேரிய திரைப்படம் ஒரு ரயில்வே பணியாளரின் நேர்மைக்குக் கிடைத்தது என்னவென்று பேசும் ஒரு திரைப்படம். இது சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் பங்குபெற்று பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம். அரசுச் சக்கரங்கள் உலகம் முழுவதும் இவ்விதம் தான் இயங்குகிறது என்பதை இதுபோன்ற திரைப்படங்களுக்கு கிடைக்கும் ஆதரவை வைத்து அறிய முடிகிறது.

ட்ஸான்கோ பெட்ரோவ் ரயில்வே இலாக்காவில் ஒரு கடைநிலை ஊழியர். அவர் ஒரு லைன் மேன். தண்டவாளங்களை பரிசோதித்துக் கொண்டிருந்த ஒரு நண்பகல் வேளையில் ட்ஸான்கோவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு டாலர் நோட்டு அனாதரவாக அங்கே கிடந்தது. அதை எடுத்து சுற்றுமுற்றும் பார்த்த ட்ஸான்கோ தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார். இன்னும் சற்று தூரம் நடந்து செல்கையில் மேலும் சில நோட்டுக்கள். பதற்றத்துடன் மேலும் நடக்க தண்டவாளம் நிறைக்கும் அளவிற்கு கொட்டிக் கிடந்தன டாலர் நோட்டுகள். நேர்மையான அந்த எளிய மனிதர் உடனே ரயில்வே நிர்வாகத்துக்குத் தகவல் தர, அவருடைய பாரம் குறைகிறது. ஆனால் அடுத்து அவரை ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே செய்திருந்த ஒரு ஊழலை மறைக்க, இவரை முதன்மைபடுத்தி அதை இருட்டடிப்பு செய்ய முடிவெடுக்கிறது.

ரயில்வே பப்ளிக் ரிலேஷன் ஆபிஸரான ஜூலியா ஸ்டேகோவா தன்னுடைய குழுவினருடன் ஸ்டான்கோவை படமெடுக்கிறாள். அவருடைய இந்தச் செயலைப் போற்றி அவருக்கு பரிசளிப்பு விழாவொன்றினை ஏற்பாடு செய்து ரயில்வே நிர்வாக அதிகாரியிடமிருந்து புத்தம் புதிய டிஜிட்டல் கடிகாரம் ஒன்றினை பரிசளிக்க வைக்கிறாள். திக்குவாய் பிரச்னையுள்ள ஸ்டான்கோவாவால் ஜூலியா தன் கையிலிருந்த கடிகாரத்தை அவிழ்க்கையில் எதுவும் பேச முடியாமல் போகிறது. தொலைக்காட்சி முன்பும், பாராட்டு விழாவின் போதும் கூட திக்கித் திக்கி அவர் பேசிய வார்த்தைகள் அனைவரையும் பொறுமை இழக்கவே செய்கிறது. அவருடைய நேர்மையின் விழாவாக அதை அவர்கள் கொள்ளாமல் ஒருவரை பாராட்டுவதன் மூலம் தன்னிலை உயர்த்திக் கொள்வதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இதை உணர்ந்த ட்ஸான்கோ விழா முடிந்ததும் அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

நேர்மைக்குக் கிடைத்த பரிசாக புதிய கடிகாரம் அவர் கைகளில் இருந்தாலும் பழைய கடிகாரம் அவருடைய தந்தை பரிசளித்தது. பல வருடங்களாக அதை அணிந்த சுவடு அவர் கைகளில் அச்சாக பதிந்திருந்தது. தவிர அன்பான மகனுக்கு என்று அவர் தந்தை வாழ்த்துக்களை பொரித்து பரிசளித்திருந்த அந்த கைக்கடிகாரம் காலம் தாண்டி அவர் தந்தையின் பாசத்தின் நினைவாக அவருடன் எப்போதும் உடன் இருந்து வந்தது. இத்தகைய சிறப்புக்களும் பிரத்யேக பொக்கிஷமாகவும் அவர் பாதுகாத்து வந்த பழைய கடிகாரத்தை திருப்பிக் கேட்டபோது மறுநாள் தருகிறேன் என்று ஜூலியா குழுவினர் அவரை விரட்டியடிக்காத குறையாக திருப்பி அனுப்புகிறார்கள்.

ஜூலியா திறமையான ஒரு அதிகாரியாக இருந்தாலும் சின்ன சின்ன சந்தோஷங்களோ, மகிழ்வான தருணங்களோ அவள் வாழ்வில் இருப்பதில்லை. காரணம் அவள் இயந்திரத்தனமான வேலை சூழல்களிலும், தன்னை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ளும் அவசரத்திலும் எப்போதும் இருப்பதால் அதிகாரத்தின் இருக்கையில் மனத்தை இறுக்கமாகவே வைத்துப் பழக்கியிருந்தாள். நாற்பது வயதுக்கு மேல் குழந்தைப்பேறு கடினம் என்று அவளை கெஞ்சி பணிய வைத்து கருத்தரிக்கும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார். இந்த காலகட்டத்தில் தான் ட்ஸான்கோவுக்கு விருது கொடுக்கும் விழாவினை அவள் மேற்கொள்கிறாள். விழா முடிந்த கையோடு களைப்பில் வீட்டுக்குச் சென்றுவிடும் ட்ஸான்கோவின் கடிகாரத்தை மறதியாக எங்கோ வைத்துவிடுகிறாள். கதை இங்கிருந்து தான் உண்மையில் தொடங்குகிறது. தன்னுடைய கடிகாரத்தை ட்ஸான்கோ திரும்பப் பெற்றாரா? ஜூலியாவின் அலட்சியம் அவரை எந்த அளவுக்கு துன்புறுத்தியது என்பதையும் மிக அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

வெளிப்பார்வைக்கு சிறிய கதையாக இது தோன்றினாலும், அதிகாரத்துக்கும் ஆக்கிரமிக்கும் எதிராக எறியப்பட்ட சிறு கல் தான் இத்திரைப்படம். படம் முடிந்த பின்னரும் அதைப் பற்றிய சிந்தனையில் பார்வையாளர்கள் இருந்தால் நிச்சயம் அது வெற்றி பெற்றது எனக் கொள்ளலாம். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கேஸினோ திரையரங்கில் 8-ஆம் தேதி பார்த்த திரைப்படம் இன்றளவும் நினைவில் நீங்காமல் இருக்கக் காரணம் அப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உண்மைத்தன்மை தான். நாடு கடந்து, மொழிகள் கடந்து அது சொல்லும் அப்பட்டமான நிஜம் மெய் சிலிர்க வைக்கக்கூடியது.

இயக்குநர் – கிரிஸ்டினா க்ரோஸிவா / பெடர் வல்சோனவ்

நாடு – பல்கேரியா

நடிகர்கள் – ஸ்டேஃபன் டெனோலியுபவ் (ட்ஸான்கோ பெட்ரோவ்), மார்கிடா கோஷெவா (ஜூலியா ஸ்டேகோவா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com