அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றங்களில் மெர்சல் படம் தொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பு - அதிரிந்தி (Adirindhi) நாளை வெளியாகிறது. தெலுங்கிலும் தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது.
முதலில் தமிழில் வெளியானதுபோலவே தெலுங்கிலும் அக்டோபர் 18 அன்று வெளியாக இருந்தது. ஆனால் தணிக்கையில் சில காலதாமதங்கள் ஆனதால் நாளை வெளியாகிறது. தமிழில் வசூலில் சாதனை படைத்து வருகிறது மெர்சல். விஜய் படங்களில் ரூ. 200 கோடியைத் தொடவுள்ள முதல் படம் என்கிற பெருமையை அடையவுள்ளது. அதேபோல தெலுங்கு மெர்சலும் வசூலில் சாதனை படைக்குமா என்கிற ஆவல் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் 100 திரையரங்குகளில் வெளியானது மெர்சல். அதிரிந்தி, 41 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நாளை படம் வெளியாவதால், அதிரிந்தி டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.