பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.11,400 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
வங்கி கடன் ஏய்ப்பு மோசடியில் சிக்கியுள்ள தொழிலதிபர்கள் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான ரூ.94.52 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். அதேபோன்று பல கோடி ரூபாய் மதிப்புடைய அவர்களது 9 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தற்போது நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருட ஜனவரி மாதத்தில் நீரவ் மோடியின் வைர வியாபாரத்தின் விளம்பரத் தூதராக பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டார். அப்போது பிரியங்கா கூறியதாவது: நமது பாரம்பரியம் மீது இருவரும் பெருமை கொண்டவர்கள். உலக அரங்கின் முன்பு நவீன இந்தியாவை முன்னிறுத்தும் யோசனையில் இருவரும் இணைந்தோம். அவருடைய நகைகள் செம்மையாக உள்ளன. அதன் அழகான வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தவை என்று கூறினார்.
இந்நிலையில் நீரவ் மோடி மீது மோசடிப் புகார் எழுந்துள்ளதால் அவர் நிறுவனத்துடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இதை அவருடைய செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.