பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைக் கதை ‘மகா நடி’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் இந்த மாதம் 9, 11 தேதிகளில் வெளியிடப்பட்டு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தை சாத்தியப்படுத்தியமைக்காக அதன் இயக்குனர் நாக் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர்களான ப்ரியங்கா தத், அஷ்வின் தத் உள்ளிட்டோர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தன் அம்மா சாவித்ரி குறித்து இப்படி ஒரு அருமையான வாழ்க்கைச் சித்திரத்தை இயக்கி மறைந்த தனது தாயாரை மீண்டும் ரசிகர்கள் நெஞ்சில் வாழ வைத்த பெருமை நாக் அஷ்வினுக்கே சேரும் என சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி நெக்குருகிப் பாராட்டியுள்ளார்.
இத்திரைப்படத்துக்காக படத்தின் இயக்குனர் மட்டுமல்ல நடிகை கீர்த்தி சுரேஷும் கூட தன்னிடம் அலைபேசியில் பேசாத நாளில்லை. தினமும் ஃபோன் செய்து; சாவித்ரி எப்படி நடப்பார், எப்படித் தலைவாருவார்? எப்படி ஸ்டைலாகக் கார் ஓட்டுவார்? எப்படி சமைப்பார்? எப்படிச் சிரிப்பார்? எப்படிப் பேசுவார்? எப்படியெல்லாம் நண்பர்களை உபசரிப்பார்? என்றெல்லாம் கீர்த்தி தன்னிடம் கேட்டுக் கொள்ளாத நாளில்லை. அந்த அளவுக்கு ஈரத்தை உறிஞ்சும் பஞ்சு போல கீர்த்தி என் அம்மா சாவித்ரியின் இயல்புகள் ஒவ்வொன்றையும் அப்படியே நான் அளித்த தகவல்களில் இருந்து உறிஞ்சி எடுத்துக் கொண்டு இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார். படத்தை திரையில் காணும் போது நான் கீர்த்தியைக் காணவே இல்லை. என் அம்மாவைத் தான் பார்த்தேன். அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தது கீர்த்தியின் நடிப்பு. இதற்காக நான் மேனகாவுக்கு நன்றி சொன்னேன்.
‘ என் அம்மாவைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி’ என்று மேனகாவிடம் நான் கூறினேன். என்று நடிகை கீர்த்தி சுரேஷை மனமுருகிப் பாராட்டினார் சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி.
மறைந்த நடிகை சாவித்ரிக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர்.
தவமாய் தவமிருந்து படப்பிடிப்பில் சேரனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது: சரண்யா பொன்வண்ணன்
‘டங்கல்’ சிறுமி சாய்ரா வாஸிமின் அதிர்ச்சியூட்டும் சமூக ஊடகப் பகிர்வு!
நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான சந்தேக மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு!
மனம் திறந்து பேசுவதில் அன்றும், இன்றும் குஷ்பூவை யாராலும் மிஞ்ச முடியாது!