சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினிக்கு ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது என்று அவரது நண்பரான நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஞாயிறன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இந்த தேர்தல் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று காவல்துறை மறுத்துவிட்டது.
இதனிடையே இடீர் திருப்பமாக நடிகர் சங்கத் தேர்தலைநடத்துவதற்கு தடை விதித்து பதிவுத் துறை தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதை எதிர்த்து விஷால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அந்த வழக்கில் சனிக்கிழமை இரவு அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் ஞாயிறு காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதனிடையே தபால் ஒட்டு அனுப்புவதற்கான படிவம் சரியான நேரத்திர்க்கு வந்து சேராத காரணத்தால் இந்த தேர்தலில் வாக்களிக்க இயலாதுஎன்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினிக்கு ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது என்று அவரது நண்பரான நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
தனது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:
நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனது வாக்கினைப் பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். நண்பர் ரஜினிக்கு போஸ்டல் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இங்கு இருக்கும் அனைத்து நடிகர்களையும் போல ரஜினியின் ஓட்டு மிக முக்கியமானது. அது இல்லாதது வருத்தமளிக்கிறது. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். நனன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.