பல்வேறு விவாதங்களில் சுசாந்த் சிங்கின் பெயரை இழுத்ததால் அவருடைய குடும்பத்தினரிடம் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை ஸ்வரா பாஸ்கர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.
சுசாந்த் சிங்கின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிகழும் அரசியல் தான் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ளார்கள். வாரிசுகளுக்கும் நண்பர்களுக்கும் சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்கப்படுவதால் வெளி ஆள்களால் பாலிவுட்டில் ஜெயிக்க முடியவில்லை என்று பலரும் சமூகவலைத்தளங்களில் எதிர்வினையாற்றியுள்ளார்கள். பாலிவுட் நட்சத்திரங்களுக்கிடையே இது பெரிய விவாதமாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில் நடிகை ஸ்வரா பாஸ்கர் ட்விட்டரில் எழுதியதாவது:
நமது விவாதங்களில் சுசாந்த் சிங்கின் பெயரை பல முறை இழுத்துள்ளோம். இதனால் சுசாந்த் சிங்கின் குடும்பத்தினரிடம் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். சுசாந்த் சிங்கின் புதிய படம் வருகிறது. நாம் இழந்த அற்புதமான மனிதரின் வாழ்க்கையைக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.
ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.
தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.