தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: நவம்பர் 22-ல் நடைபெறுகிறது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்கும் தனி அதிகாரியாக மாவட்டப் பதிவாளர் சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே போன்று ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

ராதாகிருஷ்ணன்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து, கடந்த ஜூன் 30 ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு காலக்கெடுவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்தி முடிக்கப்படாததால், தேர்தலை நடத்தி முடித்த கால அவகாசம் வழங்க கோரி ராதாகிருஷ்ணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.டி ஆஷா முன்பு கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டார். சிறப்பு அதிகாரியான ஒய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்து அதுதொடர்பான அறிக்கையை வரும் ஜனவரி 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய  வேண்டும் என நீதிபதி பிறப்பித்த  உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம். ஜெயசந்திரன் அறிவித்துள்ளார். சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நவம்பர் 22 அன்று காலை 8 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020-22ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதிசெய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி. சிவா தலைமையிலான பாதுகாப்பு அணி போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு டி. சிவாவும் பொருளாளர் பதவிக்கு கே. முரளிதரனும் செயலாளர்கள் பதவிகளுக்கு பி.எல். தேனப்பனும் ஜேஎஸ்கே சதிஷ் குமாரும் துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு ஆர்கே சுரேஷும் தனஞ்ஜெயனும் போட்டியிடவுள்ளார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கே. ராஜன், ராதாரவி, சித்ரா லக்‌ஷ்மணன் உள்ளிட்ட பலர் போட்டியிடவுள்ளார்கள். 

தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் சார்பில் தேனாண்டாள் முரளி தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com