தன்னுடைய சமீபத்திய கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தமிழில் ‘தலைவி’ திரைப்படத்தில் அறிமுகமானவர். ஹிந்தியில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் கங்கனா தன்னுடைய அரசியல் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர்.
இந்திய அரசின் சார்பாக சமீபத்தில் அவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. இதற்கடுத்து ‘டைம்ஸ் நௌ’ செய்திக்கு அவர் அளித்த நேர்காணலில் ‘இந்தியா 2014-ஆம் ஆண்டு மோடி பிரதமரான போதுதான் உண்மையில் சுதந்திரம் அடைந்தது. 1947-ல் கிடைத்தது பிச்சை’ எனத் தெரிவித்தார்.
இக்கருத்து வேகமாக இணையத்தில் வைரலாகத் தொடங்கிய நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் கங்கனாவிற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் சர்மா , ’கங்கனாவின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டும். உண்மையாக சுதந்திரத்திற்குப் போராடியவர்களைத் தன் அரசியல் லாபத்திற்காக சிறுமைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய ‘பத்ம ஸ்ரீ’ விருதைத் திரும்பப் பெற வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ’மகாத்மா காந்தியின் தியாகத்தை அவமதிப்பதும், சில சமயம் அவரது கொலையாளியை (நாதுராம் கோட்சே) புகழ்வதும், இப்போது மங்கள் பாண்டே, ராணி லக்ஷ்மிபாய், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை அலட்சியம் செய்வதையும் நான் பைத்தியக்காரத்தனம் அல்லது தேசத்துரோகம் என அழைக்க வேண்டுமா?" என பாஜக அமைச்சர் வருண் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
ஆம் ஆத்மி சார்பில் தில்லியில் கங்கனாவின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.