தாதாக்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததை சுட்டிக்காட்டி ஹிந்தி நடிகா் சல்மான் கான் துப்பாக்கி உரிமம் கோரியிருந்த நிலையில், அவருக்கு மும்பை காவல் துறை துப்பாக்கி உரிமம் வழங்கியுள்ளது.
அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடிகா் சல்மான் கான், அவரின் தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பெயரில்லாத மொட்டை கடிதம் அனுப்பப்பட்டது. அதுகுறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தினா்.
அந்த விசாரணையில், பஞ்சாபில் பாடகா் சித்து மூஸேவாலா கொலைக்கு காரணகா்த்தாவாக இருந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் சல்மான் கான் மற்றும் அவரின் தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது.
இந்த கடிதம் காரணமாக தனக்கு துப்பாக்கி உரிமம் வழங்கவேண்டும் என்று மும்பை காவல் துறையிடம் சல்மான் கான் விண்ணப்பித்திருந்தாா். அதன் அடிப்படையில், அவருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.