கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, த்ரிஷா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்தப் படத்துக்கு மனு ஷஜு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மனு ஷஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ''பொன்னியின் செல்வன் படத்தின் முக்கியமான போர்க் காட்சியை படத்தொகுப்பு செய்தேன். அதனை உடனடியாக மணிரத்னத்துக்கு காட்ட சென்றேன். ஒவ்வொரு காட்சியும் 7 கேமரா, ஹெலி கேம், கோப்ரோ கேமராவால் படமாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | ஸ்ருதி ஹாசனுக்கு பிரபாஸின் சலார் படக்குழுவின் பிறந்த நாள் பரிசு
அந்த போர் காட்சியில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். ஒரு காட்சியை படத்தொகுப்பு செய்து அதனை இயக்குநருக்கு காட்டும்போது அவர் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என தெரிந்துகொள்ள இயக்குநரின் முகத்தைப் பார்ப்பேன்.
போர் காட்சிகளை மணிரத்னத்தின் சிறப்பான எழுத்து, பாகுபலி சண்டைப் பயிற்சி இயக்குநரின் வடிவமைப்பு, ரவி வர்மன் திறமையான ஒளிப்பதிவால் உருவாக்கப்பட்டிருந்தது.
படத்தொகுப்பு பணிகளை எங்கே தொடங்குவது, எங்கே முடிப்பது என்ற குழுப்பம் இருந்தது. ஆனால் நான் 30 படங்களுக்கு மேல் படத்தொகுப்பு செய்த அனுபவம் எனக்கு கைகொடுத்தது.
இயக்குநர் மணிரத்னம் நான் படத்தொகுப்பு காட்சியை பார்த்ததும் எதுவும் சொல்லவில்லை. உடனிருந்த ஜெயம் ரவி மணிரத்னத்திடம் எதுவோ சொல்லி, பின்னர் படத்தொகுப்பு செய்த காட்சியைப் பார்த்தார்.
ஜெயம் ரவியும் என்னிடம் எதுவும் சொல்லாமல், மணிரத்னத்திடம் மட்டும் அவரது கருத்துக்களை தெரிவித்தார். பின்னர் மணிரத்னம் என்னைப் பார்த்து சிரித்தபடி அவரது கட்டை விரலை உயர்த்தி காட்டினார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.