தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தி தவறாக விளம்பரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரபல நடிகர் சூரி எச்சரித்துள்ளார்.
நடிகர் சூரியின் கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல், கலைக்கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று சூரியின் படத்துடன் ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் சூரி கூறியுள்ளதாவது:
இந்த விளம்பரத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த புகைப்படம் நான் சென்ற ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்டது. அதை வைத்து இப்படி ஒரு விளம்பரத்தை வடிவமைத்துள்ளனர். விளம்பரங்கள் செய்த நபர்களை அழைத்து இப்படி தவறான விளம்பரம் தர வேண்டாம் என சொல்லி இருக்கிறோம். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் செய்யும் கல்வி உதவிகள் தனிப்பட்ட முறையில் செய்து வருகிறோம். இந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கல்வி உதவியின் பெயரால் இப்படி தவறான விளம்பரங்கள் தந்து புனிதமான கல்வியை வியாபாரம் ஆக்குவது இந்தச் சமுதாயத்துக்கு என்றுமே நல்லதில்லை என்று கூறியுள்ளார்.