ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2டி தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்த ஜெய் பீம் படம் கடந்த வருடம் ஓடிடியில் வெளியாகி பலத்த பாராட்டைப் பெற்றது.
இந்தப் படம் வெளியான பிறகு குறிப்பிட்ட சமூதாயத்தின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஜெய் பீம் திரைப்பட உருவாக்கத்தில் யாரையும் அவமதிக்கும் எண்ணம் இல்லை. இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவா்களுக்கும் புண்பட்டவா்களுக்கும் என் உளப்பூா்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்திரைப்படத்துக்கு எழுந்த சில எதிா்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிா்பாராதவை. பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டா் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஜெய் பீம் படம் தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும் குறிப்பிட்ட சமூதாயத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையிலும் உள்ளதால் சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பு புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை மே 20-ம் தேதி தாக்கல் செய்ய வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.