பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து கவனம் பெற்ற நடிகை ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் காலமானார்.
திருமணம் நடைபெற்று ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், திடீரென இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு சின்னத்திரையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. நாதஸ்வரம் தொடரில் கோபி கதாபாத்திரத்தின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருப்பார்.
அதனைத் தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் ஆகிய தொடர்கள் அடுத்தடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். சில திரைப்படங்களிலும் ஸ்ருதி நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அரவிந்த் சேகர் உடற்பயிற்சி நிலையத்தை நடத்திவந்தார். இவர் 2022ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றவர்.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அரவிந்த் சேகர் உயிரிழந்துள்ளார். இதனால், சின்னத்திரை உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஸ்ருதி சண்முகப்பிரியாவின் ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.