சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஸ்ருதி ராஜ் புதிய தொடரில் நடிக்கவுள்ளார். அந்தப் புதிய தொடரில் ஸ்ருதிக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த இருவர், புதிய தொடரில் இணைந்து நடிக்கவுள்ளது சின்னத்திரை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேவையானியின் கோலங்கள் என்ற தொடரில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ராஜ் அறிமுகமானார். தென்றல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.
2013ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரில் நடித்தார். இந்தத் தொடர் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு உள்ளிட்ட தொடர்களிலும் ஸ்ருதி ராஜ் நடித்துள்ளார். இதனால், சின்னத்திரையில் அசைக்கமுடியாத நடிகையாகவும் ஸ்ருதி மாறினார். தற்போது இவருக்கு 42 வயதாகிறது. புதிய தொடருக்காக உடல் எடையையும் அவர் குறைத்துள்ளார்.
நடிகர் விஜய்யுன் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ், மெட்டி ஒலி தொடரில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை, ஆனந்தம், திருமதி செல்வம், யாரடி நீ மோகினி, சித்தி -2, வானத்தைப் போல உள்ளிட்ட 34 தொடர்களில் நடித்துள்ளார்.
தென்றல் தொடரில் நடிகை ஸ்ருதி ராஜுடன் ஏற்கெனவே துணைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் சஞ்சீவ், வானத்தைப்போல தொடரில் மிடுக்கான காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஸ்ருதி ராஜ் உடன் இணைந்து இணைந்து முதன்மை பாத்திரத்தில் சஞ்சீன் நடிக்கவுள்ளார்.
தொடரின் பெயர் மற்றும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.
படிக்க | புற்றுநோய் மையத்தில் சீரியல் நடிகை!