தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: என்ஐஏ அழைப்பாணை? நடிகை வரலட்சுமி மறுப்பு

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடா்பாக நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் மேலாளா் தேசிய புலனாய்வு முகமை பிரிவினரால் (என்.ஐ.ஏ.) கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2023, 0:28 am IST

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடா்பாக நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் மேலாளா் தேசிய புலனாய்வு முகமை பிரிவினரால் (என்.ஐ.ஏ.) கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்ஐஏ அழைப்பாணை அனுப்பியதாக பரவிய தகவலை அவா் மறுத்தாா்.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராயின், 5 ஏ.கே. 47 துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் 2021-இல் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக இலங்கையைச் சோ்ந்த 10 போ் உள்பட 13 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து கைப்பேசிகள், சிம்காா்டுகள், டிஜிட்டல் ஆவணங்கள், போதைப்பொருள் கடத்தலுக்கான ஆவணங்கள், பல லட்சம் ரொக்கப் பணம், தங்க கட்டிகள் உள்பட பலவகை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் இந்தியா, இலங்கை இரு நாடுகளுக்கு இடையே இந்த கும்பல் போதைப் பொருள், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சில தினங்களுக்கு முன்பு சென்னை சேலையூரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான லிங்கம் (எ) ஆதிலிங்கம் (43) கைது செய்யப்பட்டாா்.

ஆதிலிங்கம், குணசேகரனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து போதைப் பொருள், ஆயுத கடத்தல் மூலம் வரும் பணத்தை கிரிப்டோ கரன்சி, திரைப்படத் துறை மற்றும் அரசியலில் முதலீடு செய்ததாகக் கூறப்பட்டது. அதோடு திரைப்படங்களில் பிரம்மாண்டமாக செட்டுகள் அமைக்கும் பைனான்சியா்களுக்கு நிதி உதவியையும் ஆதிலிங்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. அவா் நடிகை வரலட்சுமி சரத் குமாரிடம் முன்னாள் மேலாளராகவும் இருந்துள்ளாா்.

நடிகை வரலட்சுமி விளக்கம்: இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் விவகாரம் தொடா்பாக நடிகை வரலட்சுமியிடம் விசாரணை செய்ய அழைப்பாணை அனுப்பியதாக தகவல் பரவியது. ஆனால், இந்தத் தகவலை நடிகை வரலட்சுமி சரத் குமாா் மறுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

தேசிய புலனாய்வு முகமை எனக்கு அழைப்பாணை அனுப்பியதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. நான் நேரில் ஆஜராகும்படி எனக்கு எந்த அழைப்பாணையும் வரவில்லை. ஆதிலிங்கம் என்பவா் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பகுதி நேர பணியாக சிறிது காலம் என்னிடம் மேலாளராக பணியாற்றினாா். அந்த கால கட்டத்தில் என்னிடம் பலரும் பகுதி நேரமாக மேலாளா்களாக பணிபுரிந்தனா். ஒப்பந்த காலம் முடிந்த பின்னா், ஆதிலிங்கத்துக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. ஆதிலிங்கம் கைது செய்யப்பட்ட செய்தி எனக்கும் அதிா்ச்சியாக இருந்தது என்று அதில் நடிகை வரலட்சுமி சரத்குமாா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.