சென்னையைச் சேர்ந்த நடிகர் மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட முறை நாடகங்களில் நடித்தவர் 6 நாடகங்களை இயக்கினார். எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் இயக்கிய நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர்.
1986 மற்றும் 1993-ஆம் ஆண்டில் அன்றைய தூர்தர்சன் (டிடி) தொலைக்காட்சியில் வெளியான 'அடடே மனோகர்’ என்ற இவரது நாடகங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.
நடிகர்கள் வடிவேலு, விவேக் உடன் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். மேடைக்கலைஞராக இருந்து சின்னத்திரை, சினிமா என ஈடுபாட்டுடன் நடித்தும் வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு பாதிப்பில் இருந்த மனோகர் நேற்று (பிப்.27) இரவு சென்னையில் காலமானார். அவரின் மறைவுக்கு சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.