பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம்.
இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த பிப்.23 ஆம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல்பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை உலகளவில் ரூ.50 கோடிக்கு அதிகமாக வசூலித்த இப்படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளது.
தமிழகத்தில் இப்படம் வெற்றியடைந்ததற்குக் குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி, “மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் எனக்கு மிக பிடித்திருந்தது. இப்படத்தைப் பார்த்த கமலும் சில காட்சிகளில் நெகிழ்ந்துவிட்டதாகக் கூறினார். குறிப்பாக, கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகளை கிளைமேக்ஸ் காட்சியில் பொருத்தியதில் புல்லரித்துவிட்டது. எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், இளையராஜா அண்ணனைப்போல் யாராலும் வேகமாக இசையமைக்க முடியாது. குணா படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் 2 மணிநேரத்தில் இசையமைத்தவர். அவரைப்போன்ற ஆள் யாரும் கிடையாது.” எனக் கூறியுள்ளார்.