நடிகை நித்யா மேனன் காதல் தோல்வியடைந்த பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.
தற்போது, சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’, 'மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத்தொடர்களும் நல்ல வரவேற்பினை பெற்றது.
தற்போது நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் காதல் தோல்வியடைந்த பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் காமினி இயக்கத்தில் பெயரிடப்படாத காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வினய் ராய், நவ்தீப், தீபக் பரம்பொள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ப்ரீத்தா ஜெயராமன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஷ்ணு வரதனிடம் உதவி இயக்குநராக இருந்த காமினி இந்தப் படம் குறித்து ஆங்கில ஊடகத்தில் பேசியதாவது:
பொதுவாக படங்கள் ஆண்களின் காதல் தோல்வியினைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் இந்தப் படம் காதல் தோல்வியடைந்த பெண்ணைப் பற்றிய கதை. காதல் தோல்வியின்போது அவர் என்னவெல்லாம் பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பதையும் இந்தப் படம் பேசும். இந்த ‘சூப் கேர்ள்’(காதல் தோல்வியடைந்த பெண்களை குறிக்கும் சொல்) கதாபாத்திரத்தில் நித்யா நடிக்கிறார். சமூகத்தில் இருக்கும் பொதுவான வழக்கத்தினை உடைக்கும் கதாபாத்திரமாகவும் தனது அனுபவங்களின் ஊடே இந்தப் பிரச்னைகளில் இருந்து எப்படி மாறுகிறார் என்பதையும் படம் பேசும் எனக் கூறினார்.