நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஆக்ஷன் படமொன்றில் நடிக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவை கௌரவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் தன் அலுவலகத்தில் விழா ஒன்றை நடத்தினார். இதில், சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை உருவாக்கிய விதம் குறித்துப் பேசப்பட்டது.
இந்நிகழ்வில், இயக்குநர் மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், வைரமுத்து, நடிகர் சித்தார்த், மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, பிரபல நடன இயக்குரும் பிரபுதேவாவின் அப்பாவுமான சுந்தரம் மாஸ்டருடன் நடிகர் கமல்ஹாசன் ஒற்றைக் காலைத் தூக்கியபடி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதைத் தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த கமல், “அண்ணாத்தை ஆடுறார்.
அபூர்வ சிங்கீதம் , நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு. சுந்திரம் மாஸ்டருடன் ஒத்தைகாலில் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன்.” எனக் கூறி புகைப்படத்தைப் பதிவிட்டார்.
இதைப் பார்த்த, நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா, “இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.” என நெகிழ்ச்சியடைந்துள்ளார்.